ஆம்பூரில் மண்ணுக்குள் புதைந்த விவசாய கிணறு

11/01/2022

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ஆம்பூரில் கிணறு ஒன்று மண்ணுக்குள் புதைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் ராமு விவசாயி. விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நிலத்தில் பாசன கிணறும் உள்ளது.

நேற்று காலை ராமு நிலத்தின் அருகே பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் அக்கம் பக்கத்தினர் சென்று பார்வையிட்டனர்.

அப்போது கிணற்றின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த செங்கல் சுவர்களுடன் கிணறு மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் முழுமையாக கிணறு மண்ணுக்குள் புதைந்தது. அங்கிருந்த மின்கம்பமும் கிணறுக்குள் அப்படியே புதைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

கடந்த 2 மாதங்களாக மாதனூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கிணறு மண்ணில் புதைந்துள்ளது சின்னவரிக்கம், பெரியவரிகம், கைலாசகிரி என ஆம்பூர் சுற்றி உள்ள பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *