அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது.
29/01/2022
செங்கல்பட்டு=9.50.PM
கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கூட்டமாக வராமல் தனக்கு முன் மொழிபவர் ஒருவரை மட்டுமே உடன் அழைத்து வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி செயல் அலுவலர் கணேஷ் பேசும்போது கூறியதாவது:-
தற்போது கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கூட்டமாக வராமல் தனக்கு முன் மொழிபவர் ஒருவரை மட்டுமே உடன் அழைத்து வரவேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு கூட்டமாக செல்வதை தவிர்த்து தன்னுடன் 3 பேரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். தன்னுடைய ஆதரவாளர்கள் அதிகமானோரை உடன் அழைத்து செல்வதை கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை போன்ற மும்முனை சந்திப்பு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு எல்லை வரையறை செய்யப்பட்ட இந்த பகுதிக்குள் எந்தவித பதாகையும், விளம்பர தட்டிகளும் அமைக்க கூடாது. அப்படி தடையை மீறி அமைத்தால் அவை அகற்றப்படும்.
இவ்வாறு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விளக்கி செயல் அலுவலர் கணேஷ் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் விசுவநாதன், பி.ஏ.எஸ்வந்த்ராவ், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.