ஊட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாடு அறை திறப்பு

29/01/2022

ஊட்டி=8.05.PM

தமிழகத்தில் பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஊட்டியில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்ச்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கோத்தகிரி, கீழ்குந்தா, நடுவட்டம், ஓவேலி மற்றும் சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 4-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5-ந் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். வேட்பு மனுக்களை பிப்ரவரி 7-ந் தேதி திரும்பப் பெறலாம். இதையடுத்து, பிப்ரவரி 19-ந் தேதி வாக்குப் பதிவும், பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். தேர் தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ந் தேதி வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு மார்ச் 3-ந் தேதியும், மறைமுகத் தேர்தல்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் 4-ந் தேதியும் நடைபெறவுள்ளது.

இத்தேர்தல் நடவடிக்கைகளின்போது தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 0423-2441822 மற்றும் 0423-2444821 ஆகிய இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் இந்த தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *