கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்; 55 பேர் கைது

அரியலூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் ராயதுரை, திருமானூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *