கே.வி.குப்பம் அருகேஅம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தை கொலை

11/01/2022

கே.வி.குப்பம் அருகே பாகப் பிரிவினை தகராறு தொடர்பாக அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொலை செய்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் கிராமம், பழைய தபால் நிலையம் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 72), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (62). மகன் லோகேஷ் (33) மற்றும் 3 மகள்கள் உள்ளனர். லோகேஷ் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது சகோதரிகள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் வீட்டை பாகம் பிரிப்பது தொடர்பாக சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தந்தை – மகன் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உடன் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பிறகு கோவிந்தசாமி தூங்கச் சென்றுவிட்டார்.

ஆனால் லோகேசுக்கு ஆத்திரம் தாளவில்லை. இதனால் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தசாமி தலைமீது தந்தை என்றும் பாராமல் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டார். இதில் கோவிந்தசாமி தலை நசுங்கி, துடி துடித்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *