நாகர்கோவில்-சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்

08/01/2022

வெள்ளப்பெருக்கினால் சேதம் அடைந்த கால்வாய்கள், சாலைகளை விரைவாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டிடம்- நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை. மீன்வளத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் அரவிந்த் கூறியதாவது-

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டிடம், கடலரிப்பு தடுப்புக்கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் மற்றும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிடும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும். மலைவாழ் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்ட பணிகளை பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் வனத்துறையினருடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பெருக்கினால் ஏற்பட்ட கால்வாய் உடைப்புகள், பழுதடைந்த நீர்நிலைகள் மற்றும் சாலைகளை சீரமைத்து விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இந்த பணிகள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, வன அதிகாரி இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி உள்பட அனைத்துத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *