வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேயர் அறிவுறுத்தல்

வேலூர் =11/03/2022=12=20am

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம், மேயர் சுஜாதா அறிவுறுத்தினார்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், வீடுகள்தோறும் குடிநீர், சாலைகள் அமைத்தல், நவீன பஸ்நிலையம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனால் தினமும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கி பணிகளை விரைந்து முடிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் தற்போதும் பணிகள் முழுமை பெறவில்லை. வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை உள்பட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு மேயர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி 60 வார்டுகளில் நடைபெற்று வரும் பணிகள், நிறைவு பெற்ற பணிகள் குறித்தும், மீதமுள்ள பணிகள் நிறைவு பெறும் காலம் மற்றும் அப்பணிகளை மேற்கொள்வதற்கான இடர்பாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் வார்டு வாரியாக ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி தெரிவித்தார்.

கூட்டத்தில், மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர்கள், உதவிபொறியாளர்கள், இளநிலைபொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *